முருகன் ஆலயம் -விவேகானந்தநகர்

Posted on

by

கிளிநொச்சி விவேகானந்த நகர் அடியார்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீமுருகன் ஆலயம்1979,1983 ஆம் காலப்பகுதியில் குடியேறிய மக்கள் தங்களுக்கு வழிபாட்டிற்கு ஒருபொது ஆலயம் அமைத்து தருமாறு அக் காலத்தில் இயங்கிக்கொண்டிருந்த கிராம அபிவிருத்தி சங்கத்திடம் கேட்டுக் கொண்டமைக்கு இணங்க 1986ஆம் ஆண்டு ஆடி மாதம் கிராம மக்களின் பங்களிப்புடன் ஒரு சிறிய மட்ட ஆலயமாக அமைத்து அதில் வேல் ஒன்றை பிரதிஸ்டை செய்து வணங்கி வந்தனர். இக்காலப்பகுதியில் வேல் பிரதிஸ்டை செய்த தினத்தில் சாதாரண ஒரு நாள் திருவிழாவாக மக்கள் முன்னெடுத்து முருகப்பொருமானின் அருளைப் பெற்று வந்தனர்.

அதே காலப்பகுதியில் நிரந்தர ஆலயம் கட்டுவதற்கான அத்திவாரமும் வெட்டி மூலஸ்தானத்திற்கான அத்திவாரமும் போடப்பட்டது. இம் மட ஆலயத்தில் நித்திய பூசையினை திருவையாறு பகுதியில் வாழ்ந்து வரும் சிவஸ்ரீ ஜெயக்குமார் ஐயா அவர்கள் மூலமாக நடாத்தப்பட்டு வந்தது. இதன் பின் 1995 ம் ஆண்டு நிர்வாகம் மேற்கொண்ட நடவடிக்கையினால் அப்போதிருந்த கிராம அலுவலர் திரு.பொ.பத்மநாதன் கிராம மக்களின் ஒத்துழைப்புடன் ஆலயத்திற்கென முருகப்பொருமானின் திருவுருவ சிற்பங்களை செய்ய தீர்மாணித்து அந்த காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் இருந்து இடம் பெயர்ந்து உதயநகர் பகுதியில் வசித்து வந்த திரு பாஸ்கரன் சிற்பாசாரியாருடன் தொடர்பு கொண்டு வள்ளி தெய்வானை சமேதர முருகப் பெருமான் திருவுருவ சிற்பங்களை 125000 ரூபா செலவில் செய்து அதே ஆண்டு ஆடி மாதம் பரணி நட்சத்திர திதியில் பிரபல சிவாச்சாரியார்களான சிவஸ்ரீ சிதம்பரநாத குருக்கள்(கனகாம்பிகை அம்பாள் பெருங்கோயில் பிரதம குருக்கள்) மற்றும் சிவஸ்ரீ சிவம் ஐயா கோப்பாய் சிவம் என அழைக்கப்படும் பிரபல எழுத்தாளர்) சிவஸ்ரீ சாம்பசிவ குருக்கள் திருவையாரு சிவஸ்ரீ ஜெயக்குமார் குருக்கள் திருவையாறு, சிவஸ்ரீ கிருஸ்ணானந்த குருக்கள் ஆகியோரால் திருவுருவ விக்கிரகங்கள் பிரதிஸ்டை செய்யப்பட்டு அன்று தொடக்கம் 10 நாட்கள் மணவாளக்கோல உற்சவம் இடம்பெற்று வந்தது அத்துடன் நிரந்தர ஆலயத்திற்கான மூலஸ்தான கட்டிட வேலையும் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

1996ம் ஆண்டு கிளிநொச்சிப் பகுதியிலும் போர்சூழல் காரணமாக மக்கள் இடம் பெயர்வு நிலைமை ஏற்பட்ட போது விவேகானந்த நகர் மக்களும் இடம் பெயர்ந்தனர். அப்போதிருந்த ஆலய நிர்வாகத்தினர் ஆலய விக்கிரகங்களை பாதுகாப்பாக எடுத்து தாங்கள் குடியேறிய பகுதியில் உள்ள ஆலயங்களில் பாதுகாப்பாக வைத்து சுமார் ஐந்து வருடங்களின் பின் 2021ம் ஆண்டு மீள குடியமர மக்கள் வந்தபோது ஆலயம் சிதைவுற்றிருந்தது. .மீண்டும் ஆலயத்தை புனரமைப்பு செய்து மக்கள் வழிபாட்டினை மேற் கொண்டு வந்தனர். மீண்டும் 2009 ம் ஆண்டு போர்ச்சூழல் காரணமாக ஆலயம் சேதமடைந்து காணப்பட்ட போதும் மக்கள் மீண்டும் ஆலயத்தினை புனரமைத்து வழிபாட்டினை மேற்கொண்டதுடன் ஆலய நிர்வாகத்தினையும் தெரிவு செய்து நிரந்தர ஆலய அமைப்பதற்காக நிதி சேகரிக்கப்பட்டு வேலைகள் பூர்த்தி செய்யப்பட்டது. மேற்படி ஆலயத்தின் முதலாவது கும்பாபிசேகம் 2015ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டு தொடர்ந்து10 நாட்கள் மகோற்சவ பெருந்திருவிழா வருடந்தோறும் நடைபெற்று வருகின்றது. வருடந்தோறும் கந்த விரத நிகழ்வு சிறப்பாக இடம் பெற்று வருகின்றது. இக்கோயில் இந்துசமய கலாசார திணைக்களத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்டு அறநெறிப்பாடசாலையும் சிறப்பாக நடைபெற்று வருகின்றமை குறிப்பிடதக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *