புலோப்பளை கிழக்கு வழிவிடும் முருகன் ஆலயம்

Posted on

by


1914ஆம் ஆண்டு முருகன் வல்லி என்பவர் கதிர்காமத்திற்கு யாத்திரையாகச் சென்று மலையேறி இறங்கும் போது கதிர்காம கந்தனை உள்ளம் உருகி மகாவலிகங்கையில் நீராடிக்கொண்டிருந்தார் அப்போது நீரிலே அள்ளுண்டு வந்த வேல் அவரது வேட்டியில் தங்கியதாகவும் சற்று நேரத்திலே கருங்கல் ஒன்று அவரது கண்ணுக்கு தென்பட்டதாகவும் அதனை எடுத்துக்கொண்டு போய் தனது வீட்டிலே வைத்து வழிபடு என காட்சி கொடுக்க அவர் அதனை எடுத்து வந்து செல்வச்சந்நிதி முருகன் தீர்த்தத் திருவிழாவன்று புலோப்பளை கிழக்கு பிரதேசத்தில் தனது வீட்டுக்கு அருகிலுள்ள காணியில் நாவல் மரத்தடியில் வேல் முருகனாகவும் கருங்கல் பிள்ளையாராகவும் வைத்து அபிசேக ஆராதனைகளோடும் திருக்குளிர்த்திப் பூஜையோடும் முருகப்பெருமான் தோற்றம் பெற்றார். காலங்கள் செல்லச்செல்ல முருகனுக்கும் பிள்ளையாருக்கும் சிறிய கொட்டகை அமைத்து பூஜை செய்யப்பட்டது.


1962ஆம் ஆண்டு காலப்பகுதியிலிருந்து முருகன் வல்லியின் பெறாமகனாகிய கந்தன் சின்னையா பூசகராக நியமிக்கப்பட்டார். அக் காலத்திலிருந்து பூஜை வழிபாடுகள் சிறப்புற ஆரம்பித்து நடைபெற்றுக்கொண்டிருந்தபோது 1975.10.30 அன்று சிலரால் தீ மூட்டி எரிக்கப்பட்டது. முருகப்பெருமான் கனவிலே தோன்றி இலை குழை கொண்டு குடிசை அமைத்து பூசை செய் எனவும் தீ மூட்டியவர்கள் சில நாட்களுக்குள் அகால மரணமடைவார்கள் எனவும் அவர்களின் உறவுகளாலேயே இவ்வாலயம் மீண்டும் கட்டிடமாக மிளிரும் எனவும் காட்சி கொடுக்கப்பட்டது. அதே போன்று சில நாட்களுக்குள் அவர்கள் இறந்துவிட ஊர்மக்கள் இணைந்து 1976ஆம் ஆண்டு காலப்பகுதியில் முருகனுக்கு ஒரு ஆலயம் அமைக்கப்பட்டு சிறப்புற மக்கள் மத்தியில் இறை நம்பிக்கையுடன் மிளிர்ந்தது. அத்துடன் தீர்த்தக் கிணறும் அமைக்கப்பட்டது.


வருடம் தோறும் முருகப்பெருமானுக்கு விசாக தினத்தன்று முருகப்பெருமானுக்கு திருக்குளிர்த்திப் பொங்கல் நடைபெறுவதுடன் நேர்த்திக்கடன்களும் நிறைவேற்றப்படுகின்றது. அதனைத் தொடர்ந்து எட்டாம் நாள் வைரவர் சாந்தி தினத்தன்று காத்தவராயன் சிந்துநடைக்கூத்து கோலாகலமாக நடைபெற்று வருகின்றது.


ஆடிப்பௌர்ணமி தினத்தன்று முருகனுக்கு விசேட பூஜைகள் வழிபாடுகள் நடைபெற்று வருவதுடன் நவராத்திரி, சிவராத்திரி, கந்தசஷ்டி, திருவெம்பாவை, தைப்பொங்கல், சித்திரைப்புத்தாண்டு, விநாயகர்சதுர்த்தி திருக்கார்த்திகை ஆகிய விசேட தினங்களில் அபிஷேக ஆராதனைகளும் நடைபெறுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *