நாடகம்
பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகப்பிரிவின் பசுமை கலந்த பளை எனும் கிராமத்தில் பிறந்தவர் திரு. இராசையா பரராசசிங்கம் இவர் தனது ஆரம்பக்கல்வியை மாசார் அ.த.க பாடசாலையிலும், இடைநிலைக் கல்வியை வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் அ.த.க பாடசாலையிலும் கற்றார்.
புராண படனம் படிப்பதில் வல்லவராகத் திகழ்ந்த இவரது தந்தையின் கலை வழியைப் பின்பற்றி இளவயதிலிருந்தே பாட்டு, நாடகம், கூத்து கலைகளில் பாண்டித்தியம் பெற்றார்.
பாடசாலைக் காலங்களில் தமது மூத்தோரான எஸ்.எஸ் கணேசபிள்ளை, எஸ்.எஸ் அச்சுதம்பிள்ளை, இராஜேஸ்வரி சண்முகம் ஆகியோருடன் இணைந்து நடிக்க ஆரம்பித்தார்.தனது இளமைப் பராயத்தில் காத்தவராயன் கூத்து, சகுந்தலை போன்ற நாடகங்களில் நடித்தார்.
நல்லையா அண்ணாவியார், க. ஆறுமுகம் அண்ணாவியார் ஆகியோரிடம் கூத்துக் கலையைப் பயின்றார். வருடா வருடம் மாசார் வண்ணாண்பதி ஆலயத் திருவிழாக்காலங்களில் இவரது கூத்துக்கள் மேடையேற்றப்படுகின்றன.
வரலாற்று நாடகங்கள், இசை நாடகங்கள், சமூக நாடகங்கள் என பல்வேறு பரிணாமங்களில் இவரது நாடகங்கள் மேடையேற்றப்படுகின்றன.
இவரது கலைச் சேவையைப் பாராட்டி பிரதேச கலாசாரப் பேரவை 2015 இல் ‘கலைத்தென்றல்’ விருது வழங்கி கௌரவித்தது. அத்துடன் பச்சிலைப்பள்ளி பிரதேச சபை மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் மதிப்பார்ந்த சிறிதரன் ஐயா அவர்களாலும் சிறந்த கலைஞராக கௌரவிக்கப்பட்டார். மேலும் கிளிநொச்சி பண்பாட்டு பேரவையால் 2024 ஆம் ஆண்டு கலைக்கிளி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
தனது நாடகங்கள் ஊடாக இன்றும் கலைத்தாய்க்கான பணியை ஆற்றிவருகின்றார்.
Leave a Reply