
1976ம் ஆண்டின் நடுப்பகுதியில் இங்குள்ள காணிகள் அற்ற பலரால் தத்தமது குடியிருப்புகளுக்காக டிப்போ வீதி என அழைக்கப்படும் புதுமுறிப்புக்குள வீதியின் தெற்குப் பக்கமாகவுள்ள அரசகாட்டை இரகசியமான முறையில் உட்பக்கமாக குடைந்து வெட்டித் துப்பரவு செய்து குடியமர்ந்தார்கள். இதனோடு1977 யூலையில் இனக்கலவரங்களில் இடம் பெயர்ந்து தென்னிலங்கையில் இருந்து வந்த மக்களும் சேர்ந்து குடியமர்ந்து கொண்ட இடம் தான் உதயநகர் கிராமம் ஆகும்.
இக் காலப்பகுதியில் திருவாளர் நாகதம்பிராசா அவர்களும் தமது குடியிருப்புக்;காக காட்டை துப்பரவு செய்து கொண்டு போனார். அங்குள்ள பாரிய புற்று ஒன்றை அண்மித்த போது ஏற்கவே வெட்டியெடுக்கப்பட்ட பாலைமரத்தின் அடிக்குற்றியிலிருந்து நாக பாம்பு ஒன்று படமெடுத்துக் காட்டியதாம். இதை கண்ட திருவாளர் தம்பிராசா அவர்கள் தனக்கண்மையில் காடு துப்பரவு செய்து கொண்டிருந்த காலம் சென்ற சந்தை வியாபாரியான திரு. நாகராசாவையும் திரு. இராஜேந்திரத்தையும் அமைத்து காட்டி விட்டு ‘அப்பனே உனக்குத்தான் இந்த இடம் நான் வேறு இடம் பார்கின்றேன்’ என்று கூறியதும் நாக பாம்பானது அருகிருந்த புற்றினுள் சென்று விட்டதாம் தொடர்ந்து அக்காணியைத் துப்பரவு செய்த தம்பிராசா அவர்கள் 1977 ஆம் ஆண்டு தைப்பூசத்தன்று புற்றருகில் ஒரு கல்லை வைத்து தானே ஆசாரமாக இருந்து நாகதம்பிரானுக்குப் பூசையும் செய்து வந்தார். அத்தோடு சிறிது சிறிதாக ஆலயம் வளர்ச்சிப்பாதையில் சென்றது.
இவ்வாலயத்தில் திருவாளர் தம்பி ராசாவை அறங்காவலராக வைத்து சிலர் குழுவாகச் சேர்ந்து ஆலயத் திருப்பணி வேலைகளை முன்னெடுத்து விசேடமாக சிவராத்திரி விழாவும் ஆரம்பத்தில் கொண்டாடப்பட்டது. விசேடமாக கிரக மாற்றங்களுக்கான ஹோமசாந்திப்பூசைகளும் இம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ நாகதம்பிரான் தேவஸ்தானத்தில் தான் முதன்முதலில் இடம் பெற்றமையும் குறிப்பிடதக்கது.
Leave a Reply