
இலங்கைத் திருநாட்டிலே வடமாகாணத்தின் கிளிநொச்சி மாவட்டத்தின் சாந்தபுரம் கிராமத்தில் 1992 ஆம் ஆண்டு மக்கள் புதிதாக குடியமர்த்தப்பட்ட காலப்பகுதியில் படிப்படியாக மக்கள் குடியமர்ந்த நிலையில் கிராமத்துக்கு ஆலயம் இல்லை எனவே கட்டாயம் இங்கு ஒரு ஆலயம் தேவை என அனைவராலும் கலந்துரையாடப்பட்டு 1995 ஆம் ஆண்டு சாந்தபுரத்தைச் சேர்ந்த திரு கோபால் என்பவர் தனது காணியை ஆலயம் அமைப்பதற்கு அன்பளிப்பாக வழங்கினார்.
இதன் அடிப்படையில் திரு நடராசா என்பவரின் தலைமையில் சி.முருகையா, சி.கருப்பையா, வெ.இராமச்சந்திரன், சிவனு, மருதை ஆகியோருடன் திரு.க.பத்மநாதனும் இணைந்து இரணைமடு குளத்திலிருந்து (03) மூன்று கற்கள் எடுத்து வரப்பட்டு தற்போது ஆலயம் அமைந்துள்ள காணியில் முதுரை மரத்தடியில் அக்கற்கல் வைக்கப்பட்டு மக்கள் அனைவராலும் ஸ்ரீ முத்துமாரியம்மன் எனப் பெயர் சூட்டப்பட்டு வழிபட்டு வந்தார்கள். பின் 1996.01.01 அன்று யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நகுலேஸ்வரக் குருக்கள் அவர்கள் இக்கற்களை பிரதிஸ்டை செய்தார். இதன் போது கிராமமக்கள் முன்னின்று செயற்பட்டார்கள். அன்று தொடக்கம் திரு வெ.இராமச்சந்திரன் அவர்களே அம்பாளுக்கு பூசகராக செயற்பட்டு வந்தார்.
1996 ஆம் ஆண்டு ஆடி மாதம் நாட்டின் யுத்தம் காரணமாக மக்கள் அனைவரும் இடம்பெயர்ந்து விட்டார்கள் (04) நான்கு ஆண்டுகளுக்கு பின் மீண்டும் குடியமர்ந்து விட்டார்கள். ஆலயம் கிடுகினாலான கொட்டில் என்பதால் சேதமடைந்திருந்தது. பின்னர் தகரங்களால் குடில் அமைக்கப்பட்டு சிறிய கோயிலாக அம்பாள் அருளாட்சி புரிந்தாள்.
இதற்கு ஆலய நிர்வாகமொன்று புதிதாக அமைக்கப்பட்டது. மக்களிடம் இவர்கள் தங்களால் இயன்ற நிதியை சேகரித்து பாலஸ்தானஞ்செய்து தொடர்ந்தும் வழிபட்டு வந்தார்கள்.
தற்போது அமைந்துள்ள அம்பாளின் ஆலயத்திற்கான மூலஸ்தான கட்டுமான திருப்பணியை ஆரம்பித்து முதற்கட்டு (03) மூன்று அடி உயரம் கட்டி அதற்கு மேல் கட்டுவதற்கு முன் 2008 யுத்தத்தால் மீளவும் இடப்பெயர்வு ஏற்பட்டது. அதன் பின் 2010 இல் மீள் குடியேறிய பின்னர் இரண்டாவது தடவையாக திருத்தம் செய்யப்பட்டு வழமைபோல் பூஜை வழிபாடுகள் இடம்பெற்று வந்தன. ஆரம்பத்தில் ஆலய தலைவராக திரு நடராசா அவர்கள் செயற்பட்டு வந்தார்.
இவ்வாலயம் 2012.02.01 இந்து கலாச்சார அலுவல்கள் அமைச்சின் கீழ் பதிவு செய்யப்பட்டது. 2015 ஆம் ஆண்டு கொடையாளி திரு மு.நாதன் அவர்களிடம் கேட்டதற்கிணங்க அவர்களின் நிதியுதவியோடு இவ்வாலயத்திற்கான திருப்பணி வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன. தற்போது பொழிவு பெறும் எமது அம்பாள் ஆலயத்தின் முதலாவது குடமுழுக்கு மன்மத வருடம் ஆவணி மாதம் இருபத்தேழாம் நாள்(2015.08.27) வியாழக்கிழமை மிகச்சிறப்பாக இடம்பெற்றது. இந்நிகழ்வு சிவஸ்ரீ இ.சுந்தரேஸ்வர சிவாச்சாரியார் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
தற்போது இரண்டு கால நித்திய பூஜைகளும் விசேட நாள் அபிஷேகங்களும் வருடமொருமுறை அம்பாளின் கும்பாபிஷேக தின திருவிழா நடைபெறுகின்றது. அன்று இரவு அம்பாள் உள்வீதி வெளிவீதி வரும் கண்கொள்ளாக் காட்சியும் நடைபெற்று வருகின்றன. இதில் அறநெறிப் பாடசாலை மாணவர்களின் பஜனை சிறப்பம்சம் பெறுகின்றது. இவ்வாலயத்தின் அறநெறிப்பாடசாலை 2015ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு தற்போது (120) நூற்று இருபது மாணவர்களுடனும் (05) ஐந்து ஆசிரியர்களுடனும் இயங்கி வருகின்றது.

Leave a Reply