முத்துமாரியம்மன் ஆலயம் (ஊற்றுப்புலம்)

Posted on

by


1983 ம் ஆண்டு யூலை இனக்கலவரத்தின் போது மலையகத்தில் இருந்து இடம் பெயர்ந்து. கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள உருத்திரபுரம் குருகுலத்தில் தஞ்சம் அடைந்த மக்களை குருகுலப் பிதா அப்புஜி ஆதரித்தார். அவர்களை இருத்துவதற்காக உருவாக்கப்பட்டதே ஊற்றுப்புலம் கிராமம் ஆகும்.


வருந்தி வந்தவரையும் நொந்து நின்றவரையும் நிமிர வைக்கப் போரடியஅப்புஜி அவர்கள், ஆன்மீக வழியில் அறம் வளர்த்து இல்லறம் சிறக்க, இறையருள் பொலிய, தெய்வ ஆலயம் ஒன்றினை ஊற்றுப்புல மக்களுக்காக உருவாக்க எண்ணம் கொண்டார் அதற்கென ஊற்றுப்புல மக்கள் அனைவரும் ஒன்று கூடி 1985 ஆம் ஆண்டு ஆடிப்பூர நன்னாளிலே ஸ்ரீமுத்துமாரி அம்மன் ஆலயத்தினை உருவாக்கினார்கள்.
இத்தகைய ஆலயம் அமைவதில் முன் நின்று பாடுபட்டவர் இராமலிங்கம் (இராலாமி) ஆவார். அன்றைய தினம் ஊரே விழாக்கோலம் பூண்டு மாவிலை தோரணங்கள் வைத்து நிறைகுடங்கள் வைத்து ஊரையே அலங்கரிக்க காவடிகளும், கரகங்களும் பவனிவர விடி காலை பொழுதில் ‘தீமிதித்தல்’ நிகழ்வு இடம் பெற்றது.


இவ்வாறு ஊற்றுப்புல மண்ணுடனும், மனித உணர்வுகளுடனும் இணைந்து, பிணைந்து, உயர்ந்து வளர்ந்து நின்ற ஆலயம்,2008 ஆம் ஆண்டு யுத்தம் காரணமாக ஊர்மக்கள் யாவரும் இவ்வூரை விட்டு வெளியேறினர். அப்போது இவ் ஆலய பொலிவு குன்றிக் காணப்பட்டது.


மீண்டும் 2010 இல் மீள குடியேறிய ஊற்றுப்புலமக்களின் கடின உழைப்பால், இவ்வாலயமானது மண்ணால் கட்டப்பட்டது. தினப் பூஜை நடைபெறத் தொடங்கியது. இன்று இவ்வாலயமானது முன்பு போலவே பொலிவுடனும், எழிலுடனும், அழகுடனும், கம்பீரமாக, வளர்ந்து நிற்கின்றது என்பது உண்மை நிலவரமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *